Tuesday 25 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-1

கோலிவுட்டில் பேய்கள் சீசன் களைகட்டுகின்றது. நம் பங்கிற்கு நாமும் கொஞ்சம் த்ரில்லர் கம் மெசேஜ் கொடுப்போம்னு ஒரு முயற்சி. முன்பு எல்லாம் பேய் படங்களில் முன்னணி கதாநாயகிகள் நடிப்பதில்லைஆனால் தற்பொழுது நயன்,திரிஷா,ஹன்சிகா போன்ற  நமது  கனவுகன்னிகள் பேய்களாக வளம் வருகின்றனர். ஆம் நம் கோலிவுட் கடவுளின் நிலைக்கு சென்று விட்டது. எப்படி என்கிறீர்களா? பீடிகை போடவில்லை. தொடர்ந்து படியுங்கள். எலும்புக்கூடு பயம் என்பது இப்பொழுது மட்டுமல்ல. பள்ளி படிப்பு காலத்திலேயே துவங்கி விடும். பள்ளியில் சைன்ஸ் லேப்பை தாண்டும் பொழுதெல்லாம்  இதயம் படபடக்கும். உள்ளே உள்ள எலும்புக்கூடு  பலநாள் தூக்கத்தினை கெடுத்துள்ளது பலருக்கு. அபாய அறிவிப்புகளுக்கு மண்டையோட்டு படங்களை பார்த்திருப்போம். வீட்டில் கரப்பானுக்கே பயப்படும் பெண்கள் மண்டைஓடு படத்தினை பார்த்தால் நடுங்கி தான் போவர். இப்படி குலைநடுங்கச் செய்யும் மண்டையோட்டினை உடைய பூச்சியினை பார்த்திருக்கின்றீர்களா? சரி  கேள்வியாவது பட்டிருக்கின்றீர்களா?


சமீபத்தில் மதுரை காமராசர் பல்கலைகழக நுழைவாயிலுக்கு சற்று முன்பாக உள்ள பெருமாள் மலை என்று அழைக்கப்படக்கூடிய சமணச் சின்னம் உடைய மலைக்குச் சென்றேன். பல்லுயிர் பெருக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் அதிகம் என படித்திருப்பீர்கள். மதுர மலைகள் அனைத்தும் சமூக விரோத கும்பல்களின் இருப்பிடமாக உள்ளது. இம்மலையில் உள்ள  சமண சிலை சிதைந்த நிலையில் காட்சியளிப்பதே அதற்கு சாட்சி. இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் மலையையும் சுற்றுப்புற விவசாய நிலங்களையும் பார்வையிட்டபடியே  மலை ஏறினேன். சமணச்சிலைக்கு அருகில் உள்ள சிறிய மலைக் குகையில் புதுவித பூச்சி கண்டேன். அதன் மேல் மண்டையோடு போன்ற கோடுகள் இருந்தன. முகநூல் நண்பர்கள் உதவியுடன் அப்பூச்சியின் விபரம் அறிந்தேன். இது அரிய வகை மண்டையோட்டு அந்துப்பூச்சி என அறிந்தேன். இப்பூச்சியை பற்றி கூகுலாண்டாவரிடம் சோவி போட்டு பார்த்த பொழுது கிடைத்த தகவல் களை மறைக்காமல் புட்டு புட்டு வைக்கின்றேன். காணிக்கையை கண்டிப்பாய் கட்டுரையின் கமெண்ட் பகுதியில் செலுத்திடவும்.

அந்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சிகளை செடி,கொடி,மலர்களில் பகலில் கண்டு மகிழ்ந்திருப்போம். வண்ணத்துப்பூச்சி என்ற பட்டாம்பூச்சிகள் பகலாடிகள். நம் அந்துப்பூச்சிகளோ இரவாடிகள். நம்ம மதுரகாரங்க தான் பகலிரவாடிகளாச்சே. நம் பகுதி விஷேச , துக்க நிகழ்வில் இரவில் விழித்திருப்பீர்கள் அல்லவா. இரவு விசேஷங்களில் டியூப் லைட் வெளிச்சத்தில்  சீட்டு கச்சேரி நடத்தினால் அதில் அந்துப்பூச்சிகள் தான் கதாநாயகிகளாக வந்து ஆட்டம் போடும். இரவு வெளிச்சப் பகுதிகளில் அந்துப்பூச்சிகளை  காணலாம். இதை அந்துப்பூச்சி அல்லது பொட்டுப்பூச்சி (Moth) என அழைப்பர். உலகில் 1,50,000 முதல் 5,00,000 வரையிலான வகைகளில் அந்துப்பூச்சிகள் உள்ளன.

நம்ம பட்டுப்பூச்சிகள் பளிச்சினு பல வண்ணங்களில் இருப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்துப்பூச்சியோ பெரும்பாலும் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். வண்ணத்துப்பூச்சியும் அந்துப்பூச்சியும் எங்கேயாவது கிராஸ் செய்து கொண்டால் என்ன என்னிடம் இல்லை உன் பளபளப்பு? என்று  ரின் சோப்பு மின்னல்  விளம்பரங்களில் வருவது போன்று தோன்றும் என நினைக்க வேண்டாம்.
மனிதர்கள் தான் பளபளப்பு விரும்பிகள். வண்ணத்துப்பூச்சியும் அந்துப்பூச்சியும் ஒவ்வொரு வகையில் அழகிகள் தான். வண்ணத்துப்பூச்சியோ சிறகுகளை தன்னுள் மூடிக்கொண்டு அமரும். நம் அந்துப்பூச்சியோ சிறகினை விரித்தப்படி அமரும். சிறுக்குழந்தைகள் பிர்ல் வைத்த நீண்ட ஸ்கர்ட்டை அழகாக விரித்து அமர்வது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதே நேரம் வாஷிங் பவுடர் நிர்மாவும், அழகிய லைலா பாடல் ரம்பாவும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

அந்துப்பூச்சியின் உருவம் பார்த்துட்டோம். உணவு பார்ப்போமா. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி பற்றி பள்ளிப் பாடங்களில் பயின்று இருப்போம். முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என பிராக்டிக்கல் நோட்டில்  படம் வரைந்து தள்ளியிருப்போம். இதே சுழற்சி தான் அந்துப்பூச்சிக்கும். அந்துப்பூச்சி புழு பருவத்தில் படுபயங்கரமாக உண்ணும்.  


அந்துப்பூச்சிகள் உள்ள பல வகைகளில்  சில  பிளாஸ்டிக்கையே உண்பதாகவும் தகவல். சில வகை அந்துப்பூச்சிகள் முழுவளர்ச்சி அடைந்தவுடன் உண்பதில்லை.  வாயில்லா பூச்சிப்பா அவன் என நம்மில் அமைதியானவர்களை கூறுவோம் அல்லவா? உண்மையில் அந்துப்பூச்சிகளில் பல வாயில்லா பூச்சிகள் தான். வைகளில் சிலரை  பறவைகள் சாப்பிடுவதில்லை. விஷ இலைகளையே உண்டு பெருப்பதால் விஷப்பயலாக இருப்பர். வயதானால் நிறங்கள் மங்கி விஷத்தன்மை அற்று போன நேரத்தில் பறவைகள் உண்கின்றன.

அந்துப்பூச்சியின் உருவம்,உணவு,வாழ்க்கை சுழற்சியெல்லாம் பார்த்த நாம வாழ்நாட்கள் பற்றியும் பார்த்துருவோம். நம்ம அந்துப்பூச்சிகள் அற்ப ஆயுசு பசங்க. குறைந்த பட்சமாக 7நாட்கள் முதல் 14 நாட்களே வாழ்கின்றன. இந்த அற்ப ஆயுள்காலத்தில் ஆண் அந்துப்பூச்சி  வாரிசினை பெருக்குவதற்கான காதல் டூயட் பாடுவது மட்டுமே தலையான பணி. பெண் அந்துப்பூச்சியின்   உடலில் இருந்து வெளிப்படும் ஒரு வகை வாசனையை மோப்பம் பிடித்தே ஆண் அந்துப்பூச்சி கண்டு அடைகின்றன. பெண் அந்துப்பூச்சியோ தன் பங்கிற்கு  முட்டையிட்டு மூகத்தை பெருக்கிவிட்டு மரித்துவிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும்  ஜூலி, காயத்திரி, நமீதா, ஓவியாகளின் நடவடிக்கைகளை வார வாரம் மாறி மாறி பார்க்கும் நாம் அந்துப்பூச்சியை தொடர்ந்து மண்டையோட்டுப் பூச்சிப்பற்றி பார்க்க சிலநாட்கள் காத்திருப்போம் நண்பர்களே…..
                                          வஹாப் ஷாஜஹான்,எம்.ஏ.,
                                                 9942522470   

                                           திருமங்கலம். மதுரை.

9 comments:

  1. அற்புதமான தகவல் இதுவைரை அறியாத ெசெய்திகைளை அறியைவைத்தைமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. அடுத்த பாகத்தை விரைவில் பதிவிடுகிறேன்.

      Delete
  2. wonderful description sir...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nice write up done in an interesting manner.(So far I didn't learn to type in Tamil, pl.bear)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பர் ஜெயசங்கர்

      Delete
  5. கூகுள் ஆண்டவரிடம் சோவி போட்டு தகவல்களை தந்துள்ளீர்கள். கண்டிப்பாக காணிக்கையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் தெய்வகுத்தமாகிவிடும்.

    அந்துப்பூச்சி பற்றிய கட்டுரை அருமை. மண்டை ஓடு பூச்சி பற்றிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

    வாழ்த்துகள். தொடர்ந்து இயற்கையின் படைப்புகளோடு தவழ்ந்திட நிறைய கட்டுரைகளை பதிவிடுங்கள்.

    நன்றி.

    கிருஷ்ணாவினோத் (இளஞ்செழியன்)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஊக்கம் மிகுந்த காணிக்கைக்கு மிக்க நன்றி தம்பி

      Delete