Sunday 4 September 2016

தே மதுர தேவன் குறிச்சி 2


திண்டுக்கல் பூட்டிற்கு பெருமிதம் கொண்டது என்பதால் திண்டுக்கல் செல்லுபவர்கள் யாரும் வாய்ப்பூட்டு போடுவதில்லை. நன்றாக திண்டுக்கல் பிரியாணியை ஒரு பிடி பிடித்தே திரும்புவர். ஆம்பூர் சென்றால் அன்லிமிட்டா (unlimit)  பிரியாணி சாப்பிடுவது போன்று நம்ம கல்லுப்பட்டி பயணம் உளுந்தவடையில் சிறப்புடையது. தேவன் குறிச்சி ஆஞ்சிநேயருக்கு வடைமாலை படைப்பதுடன் நம் வயிற்றுக்கு வடை வார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 உளுந்த வடையும் சீரணியும் கல்லுப்பட்டி பஸ்நிலையத்தை சுற்றியுள்ள கடைகளில் காட்சி பொருளாக வைத்து அதை நோக்கி நம் நாக்கினை எச்சில் ஊற வைப்பர்.  உளுந்த வடையை தேங்காய் சட்டினியில் ஊறவைத்து குளோப்ஜாமுன் போல் கரைத்து வயிற்றுக்குள் இறக்கி கொண்டே இருக்கலாம்.

தேவன்குறிச்சி ஆதி சமண பெரும் தளமாக இருந்தற்கான சான்றுகள் காண தொடர்வோமா?


சமணச்சின்னம்
தேவன்குறிச்சி மலையைச் சுற்றி கிடைக்கும் சமண உருவங்களும் சமணப்படுகைகளும், மலை ஏற செல்லும் சிறிய அளவில் வெட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளும், சமணர்கள் மருந்து தயாரிக்கப் பயன்படுத்திய குழிகளும்  பெரும் சமணக்கோவில்  அமைந்து இருந்ததற்கான சான்றாக உள்ளது.
 தற்பொழுது சமணப்படுகை குகை போன்ற அமைப்புடன் வவ்வால்கள் அடையும் இடமாக உள்ளது. ஐந்து வழிப்பாட்டுத் தலத்தில் சமண தலம் மட்டும் வழிப்பாட்டு இடமாக இல்லாமல் உள்ளது. சமண சின்னங்கள்  இருக்கும் இடங்களில் எல்லாம் தொல்லியல் துறை சமணச்சின்னம் என விளம்பரப் பலகை வைத்திருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு வைக்கப்படாமல் உள்ளது ஏன் என்று அறியாத புதிராக உள்ளது. 
நுழைவாயில் அருகில் உள்ள கிணற்றில் உள்ள மகாவீரர் உருவ கற்சிற்பமானது அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது.  முதலில் இவ்விடம் பெரும் சமணத்தலமாக விளக்கியதற்கு இது பெரும் ஆதாரமாக உள்ளது.

தேவன் குறிச்சி நுழைவாயிலுக்கு அருகில் உள்ள நடுகல் வழிப்பாடு குறித்து காண்போம்.

நடுகல் வழிபாடு
போரில் வீரமரணம் மற்றும் மாட்டுமந்தை அல்லது ஊருக்குள் புகும் சிறுத்தை புலிகளை விரட்டுவதில் ஏற்படும் வீரனின் மரணத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் தொண்மையாக தமிழகத்தில் நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்து வந்தது நாம் அறிந்ததே. தேவன் குறிச்சி கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் அருகில் ஒரு நடுகல் கண்டுடெடுக்கப்பட்டு நான்கு புறமும் சுற்று சுவர் கட்டப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. இந்நடுகல்லில் புலியுடன் ஒரு வீரன் போரிடுவது போன்றும் அருகே பெண் ஒருத்தி இருப்பது போன்று உள்ளது.
 அருகிலேயே  கற்கள் இரண்டு நின்ற நிலையிலும் கிடைமட்டமாக ஒரு பெரிய வகை கல் இருக்கின்றது. இது உலகளவில் வழிபடப்படும் கற்திட்டை வழிபாடு என தெளிவாக தெரிந்தது. கற்திட்டைகளை மாண்டவர் வீடு, இறந்தவர் வீடு என பலவாறு அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் பல வணக்கத்தலங்கள் பண்டைய இடுகாடுகள் என்பது இங்கு காணப்படும் நடுகல் மற்றும் கற்திட்டைகள் உணர்த்துகின்றன.

கோரிக்கைகள்
இயற்கை பொலிவுடன் காட்சியளிக்கும் தேவன்குறிச்சி மலையின் சுற்றுப்பகுதிகள் சரிவர தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் நம்மிடம் மிகுந்த குறைபட்டுக்கொண்டனர். பல இடங்கள் புதர் மண்டிய நிலையில் இருப்பதால் சமூகவிரோதிகள் பலரும் தங்கள் உறைவிடமாக மாற்றிக் கொண்டுள்ளதாகவும் கூறினர். மேலும் சிலக்கோரிக்கைகளாக கல்வெட்டுகளின் விளக்கங்கள் குறித்த விளக்கப்பலகை வைத்து தொல்லியல் துறையினர் பராமரிக்க வேண்டும் என்றனர். 
குளம், கிணறு, நீர்நிலைப்பகுதிகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டால் இன்னும் நன்றாக அமையும். 1976க்கு பின்பு இங்கு அகழ்வாராய்சி செய்யப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் ஒரு அகழ்வாராய்சி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா
கல்லுப்பட்டி என்றவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வரப்பட வேண்டியவர் ஜே.சி.குமரப்பா. காந்திநினைவு நாளில் நம்மைவிட்டு மறைந்த மகானின் நினைவகம் கல்லுப்பட்டியில் தான் உள்ளது. அய்யா ஜே.சி.குமரப்பா இயற்கை சூழல் மீதும்  புகைப்பட கலையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். சூழல் மாசு படாத வகையில் நாட்டை வளமான பாதைக்கு மாற்ற முயற்சித்த மகான்.   
ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று குமரப்பாவை  மேற்கோள் காட்டுகிறார். கல்லுப்பட்டி வரை வந்து விட்டு எல்லோரும் மறந்து மற்றும் மறக்கடிக்கப்பட்டு  வருகின்ற காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா நினைவகம் செல்லாமல் திரும்பினால் பயணம் நிறைவடையாது. தேவன் குறிச்சி  சூழல்உலா வின் முக்கிய அங்கமாக கல்லுப்பட்டி காந்திநிகேதன் பள்ளியில் உள்ள அன்னாரின் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி  இனிதே வீடு திரும்பினோம்.


No comments:

Post a Comment