Wednesday 13 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 3 ?


மக்கள் வெள்ளம் கோவிலுக்குள் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். செய்தியாளர்களுடன் மக்கள் வெளியேறும் பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. சுற்றுச்சுவர்கள் நல்ல பெரிய சைஸ் கற்களால் ஒன்று சொன்னது போல் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது. சுற்றுச்சுவருக்குள் மூன்று சிறிய அளவிலான மண்டபமும் ஒரு மண்டபத்திற்கான பேஸ்மட்டமும் ஆக நான்கு தனி மண்டபங்கள் இருந்தன. 

எந்த மண்டபத்தின் மேலும் கோபுரங்கள் இல்லை.  பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்திருந்தது. சினிமா சூட்டிங் செட் ஏற்பாடு போல் சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள் மேல் மஞ்சள் துணிகள் கட்டப்பட்டிருந்தன. கோவில் போன்ற தோரணைகள் ரெடிமேடாய் இருந்தது பார்த்ததும் புலனாயிற்று. ஏராளமான பக்தர்கள் கொண்ட  இக்கோவிலை இப்படி கவனிப்பாரற்று சேதமடைய வைத்துள்ளனரே என எண்ணி வருந்தினேன்.


கண்ணகி இவ்விடத்தில் தான்  கோவலனை திரும்ப பெற்று வானுயர்த்தப்பட்டதாக அறிந்த செங்குட்டுவன், இங்கு கோவில் ஒன்றை கட்ட முடிவெடுத்தான். கோவிலுக்கான கற்களை இமயமலையில் தேர்ந்தெடுத்து கொண்டு வந்தாக கூறுகின்றனர். கங்கையிலும் காவிரியிலும் சுத்தப்படுத்தி சோழ மன்னர் கோவில் கட்டியதாக பக்தர்கள் கூறினர். ராஜராஜ சோழனும் தனது ஆட்சியின் போது இங்கு வந்து இக்கோயிலை புதுப்பித்ததாக கூறினர். அதற்கு பின்பே ராஜராஜனின் புகழும் அரசாட்சி இடங்களும் அதிகரித்தனவாம். இக்கோவிலுக்கு வந்தால் இழந்தவைகளையும் உயர்ந்த பதவிகளையும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.


வாங்க நண்பர்களே மீண்டும் பக்தர்கள் வரிசைக்கு. பக்தர்கள் வரிசையாக நுழைந்தவுடன் கேரள தரப்பினர் வழிபடும் துர்க்கையம்மன் கோவில் பகுதிக்கும், இடையில் சில ஆண்டுகளுக்கு முன் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பகுதிக்கும் செல்ல செய்கின்றனர் காவல்துறையினர். பின்பு வரிசையாக கண்ணகி சிலை இருக்கும் கோவிலுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கின்றனர் காவல்துறையினர்.

சுற்றுசுவர் ஒன்றில் தமிழ்பிராமி கல்வெட்டு ஒன்றுள்ளது. அதில் என்ன எழுதியுள்ளது என பலரிடமும் கேட்டேன். அனைவரின் பதிலும் யாமறியேன் பராபரமே. சில சுவர்களில் இருந்த பிராமி கல்வெட்டுகள் மிகவும் சேதமடைந்திருந்தன. கோவில் கட்டிய பொழுது ஒவ்வொரு நுழைவாயிலும் சிறப்பான அலங்காரம் செய்து இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு கோவில் நுழைவாயிலில் யானை மற்றும் சிங்க முக வரவேற்பு கைப்பிடி திண்டுகள் அமைந்துள்ளன. இக்கோவிலின் சுற்றுச்சுவர்களில் பல கலைநயமிக்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  

குறிப்பாக கருவில் உள்ள குழந்தை உருவம்  செதுக்கப்பட்டுள்ளது பற்றி பக்தர் ஒருவர் தற்பொழுது தான் ஸ்கேன் மூலம் குழந்தை வளர்ச்சிப்பற்றி நாம் தெரிந்திருக்கின்றோம். ஆனால் சுமார் 1500 ஆண்டு பழமையான கோவிலில் செதுக்கப்பட்ட இப்பதிவு இரு மாநில அரசாலும் கவனிப்பாரற்றுள்ளது என்றார். மேலும் சுற்றுச்சுவர்களில் பல வகைப்பட்ட சிலம்புகள், அன்னம் இரண்டு இணைந்திருப்பது போன்று அழகுற செதுக்கப்பட்டு இருக்கின்றது. இணைப்பு வீடியோவில் இதனை தெளிவாக காணலாம்.



 ஒவ்வொரு ஆண்டும் கண்ணகி கோவில் வழிபாடுக்கு முன் எல்லையில் இருக்கக்கூடிய இரு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இருமாநில பக்த சங்கங்கள் வனத்துறையினருக்கிடையே சமரசக்கூட்டம் நடைபெறுவது வழக்கமாம். இந்த ஆண்டும் தேனீ மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் இணைந்து சமரசக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதில் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் கேரள கண்ணகி அறக்கட்டளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர். கூட்டு கூட்ட முடிவின் படி இரண்டு தரப்பினரும் மூன்று மூன்று பொங்கல் வைத்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டதாம். இதற்கு மேல் யாரும் தனித்தனியே பொங்கல் வைக்கக்கூடாது. ஆனால் அங்கு நடந்தது என்ன? கண்டெடுக்கப்பட்ட ராஜராஜன் காலத்து நாணயம், தமிழக கேரள பக்தர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் அடுத்த கட்டுரையில் விரைவில் கண்ணகி கோவில் காக்கப்படுமா 4?




1 comment:


  1. கண்ணகி கோயில் தொடர் மிகச் சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொடரின் முடிவிலும், அடுத்த தொடரின் ஆரம்பம் குறித்த எதிர்பார்ப்புக்கான ‘கொக்கி’ பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு. தொடரட்டும் எழுத்துப் பணி.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete