Tuesday 27 August 2013

பசுமை நடை.


நமது தமிழகத்தில் இலக்கிய மற்றும் அரசியல் ஆர்வமுடைய பலரையும் நான்மாடக்கூடல் என அழைக்கப்படும் மா மதுரையானது சென்ற ஞாயிறு (ஆகஸ்டு 25,2013) தன்னகதே திரும்பி பார்க்கச்செய்துள்ளது.இன்றைய பெரும்பாண்மை இளைஞர் சமுதாயம் தங்களது திரை நட்சத்திரகளின் படங்கள் வெளிவராததற்கு சாலை மறியலும் மற்றும் சினமா நடிகர் நடிகைகளை தலைவர்களாகவும் தங்களது மத சாதி தலைவர்களின் கண்ணசைவில் பலர் தலைகளை கொய்யக்கூடிய கூட்டத்தினராகவும்,அரசியல் என்ற பெயரில் சிலகுடும்பங்கள் முன்னேறவும்,கொள்கைகளை கொள்ளைபுறம் தூக்கிவீசிவிட்டு இருக்கும் அரசியல் கட்சிகளிடம் தலையாட்டி பொம்மைகளாகவும் இருந்து வரும் நிலையில் மூதூர் மதுரையில் ஓர் இளைஞரின் முயற்சியில் மிகப்பெரிய மாற்றத்தினை சந்தித்துள்ளது.


இயற்கை கபளீகரம்.


மதுரையின் புராதன யானைமலை,கீரிப்பட்டிமலைகளை கிரனைட் குவாரிகும்பல் கபளீகரம் செய்யும் முயற்சிதனை எதிர்த்து அந்தப்பகுதி மக்களுடன் இணைந்து எதிர்போராட்டங்களை நடத்திய அந்த இளைஞர் இந்த மலைகளை பெருமக்கள் பார்வையிட வைப்பதன் மூலம் மதுரையின் மலைகளானது குவாரிகளாக மாறாமல் இருக்கச்செய்ய அரசிற்கு அழுத்தம் கொடுக்க செய்யமுடியும் என்றும் தமிழகத்தின் மற்றும் தமிழின் தொன்மையினையும் சமணர் வரலாற்றினையும் மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கில் 2010 ல் ஒரு சிறு குழுவாக முத்துகிருஷ்ணன் என்ற அந்த இளைஞரின் முயற்சியால் உருவான அந்த விதையான பசுமைநடை இன்று விருட்சத்திருவிழாவாக தனது 25 வது பசுமை நடையினை கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் அமைந்த ஆலமரத்தடியில் கொண்டாடியது.கம்யூனிஸ்ட் என்றாலே ஈராக்கிற்கு போராடுவார்கள் ஈழத்திற்கு போராடமாட்டார்கள் என்ற நிலைதனை மாற்றி
பாலஸ்தீனத்து மக்களுக்காகவும் போராடுவேன் பசுமைநடை கொண்டு உள்ளுர் மக்களுக்காகவும் போராடுவேன் என முத்துகிருஷ்ணன் நிரூபித்துள்ளார்.

பசுமை நடை வளர்ச்சி.

இன்று தமிழகத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில் தொலைகாட்சி என்ற சோம்பேறி மூடனின் பிடியிலும் மீறி வீட்டினை விட்டு வெளியேறினால் ஷாப்பிங் என்ற பெயரில் சென்னை போன்ற நகரங்களில் மிகப்பெரிய மால்கள், தீம்பார்க்குகள் தான் பொழுதுபோக்கு அம்சமாக அமைந்துள்ளது.மதுரையிலும் தற்பொழுது புதிதாக சில மால்களும்,தீம்பார்க்களும் எட்டிபார்க்ககூடிய நேரத்தில் பசுமைநடையானது இந்தளவு மிகப்பெரிய வெற்றிதனை பெற்றது பசுமைநடை குழுவின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.சிலப்பதிகாரம்,தொல்காப்பியம்,நன்னூல் போன்றவைகள் சமணர்களின் நூல்கள் என பசுமைநடை மூலம் தெரிந்து இவைகளை தற்போது படிக்க மிகுந்தஆர்வமூட்டுகின்றது பசுமை நடை.பள்ளி காலத்தில் வரலாற்று பாடமானது பலருக்கும் கதை அடித்து விடலாம் என்றாலும் பண்டைய தமிழர் வரலாறு என்ற பகுதியானது என்னை போன்ற சுமார் மாணக்களுக்கு கடினமானதாக இருக்கும்.ஆனால் தற்பொழுது பண்டையதமிழர் வரலாறு பசுமைநடைக்கு வந்த, வர இருக்கின்ற அனைவருக்கும் இனிமையாகவும் இலகுவாக அமையும்.இதை அனுபவத்தில் கூறுகின்றேன்.ஏனெனில் மலைகளில் அமைந்துள்ள சமணர் சிலைகளும் குகை ஓவியங்களையும் நேரில் கண்டு பின்பு பாடமாக படிக்கையில் மனதில் நன்றாக பதியும்.அடுத்ததாக உன் நண்பனைகாட்டு உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல் இந்த பசுமைநடைக்கு வரக்கூடியவர்களின் நட்பு சிறப்பாக அமைந்துள்ளதால் நட்புவட்டாரம் மிகவும் வலுவடைந்தும் பரவலடைந்தும் வருகின்றது.

விருட்சத்திருவிழா பார்வை.
ஆகஸ்டு25,2013 அன்று கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் அமைந்த ஆலமரத்தடியில் விருட்சத்திருவிழா சிறப்புடன் துவங்கியது.நாகமலை பஸ்நிறுத்தத்திலிருந்து ஆலமரத்தடிவரை வரவேற்பு அட்டைகள் அமைத்து வரவேற்புக்கு உதவினர் பசுமைநடை குழுவினர்.அதிகாலையிலேயே எழுந்து சுமார்7மணிக்கு பலரும் குடும்பத்துடன் தங்களது வீட்டு விழாபோன்று வந்து அகமகிழ்ந்து அனைவரையும் வரவேற்றனர்.வருகைபுரிந்த அனைவர் பெயர்களையும் விபரங்களையும் பதிவுதாளில் பதிய செய்து இன்முகத்துடன் வரவேற்பு பெண்கள் பெற்றனர்.அங்குள்ள மரக்கிளைகளில் முந்தைய பசுமைநடை பதிவுகளை புகைப்படமாக அமைத்திருந்தது முந்தைய பசுமைநடையின் ஞாபகங்களை பின்னோக்கி கொண்டு சென்றது. பின்பு செட்டிபுடவு நோக்கி பயணித்த பசுமைநடைகுழுவினர் அங்குள்ள மகாவீரர் சிலையினையும் மற்றும் ஐந்து சிற்பங்களையும் பார்த்துவிட்டு மீண்டும் ஆலமரத்தடிக்கு வந்தடைந்தனர்.

விசேஷ விருந்து

செட்டிபுடவு சென்று திரும்பிய குழுவினர்களுக்கு சுவையான இனிப்பு பொங்கலும் வெண்பொங்கலும் சிறந்த முறையில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.பின்பு உரைகளுக்கு நடுவே தேநீரும் குழந்தைகளுக்கு கேக் உடன் பாதாம்பாலும் வழங்கப்பட்டது.மதிய உணவாக சாம்பார் சாதமும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.இந்த உணவுகள் அனைத்தினையும் இயற்கையோடு இயைந்த முறையிலும் பாக்குமர இலை தட்டுகளில் வழங்கியும் பசுமைநடைகுழுவினர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வந்திருந்த அனைவரையும் கவனித்தனர்.

புத்தக வெளியிடு
விருட்சத்திருவிழாவின் அழைப்பிதழில் நூல் வெளீயிடு என்ற நிகழ்வு மட்டும் அமைந்திருந்தது.ஆனால் நூலின் பெயரும் வெளீயிடுபவர்கள் விபரம் இல்லை.ஆனால் நூலை பற்றி முத்துகிருஷ்ணன் அவர்களிடம் விசாரிக்கையில் நமது கடந்த 24 பசுமைநடைகளின் தொகுப்பு எனக்கூறியிருந்ததால் எனக்கு அப்பொழுதே ஆர்வமிகுதியில் எனது வலைப்பூக்களின் விளம்பரம் அமைக்கவேண்டினேன் புத்தகம்வெளியிட்ட உடன் வாங்கி எனது வலைப்பூ விளப்பரப்பகுதியை பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்.ஏனைனில் தமிழகத்தின் மிக முக்கிய இலக்கியவாதிகள் அனைவரிடமும் இந்த நூல் தவிழப்போகிறது.இத்துடன் எனது விளம்பரமும் வாசிக்கப்படும் என்ற மகிழ்வு இரட்டிப்பாக்கியது.சரி நூல் வெளீயிட்டிற்கு வருகிறேன்.இந்த நூலின் வெளியீடானது தொ.பரமசிவம் அய்யாஅவர்கள் வெளியிட அந்த மலைபகுதியில் கடந்த20 ஆண்டுகளாக பருத்திபால் விற்பனை செய்யும் பெண்மணி முதல்பிரதியினை பெற்றர்.இந்த நூலிற்கு நமது மாமதுரையின் பெயராக மதுர வரலாறு என அமைத்துள்ளனர் பசுமைநடைகுழுவினர்.இந்த நூலானது மதுரையின் கட்டட்ற கலைகளஞ்சியம் விக்கிபிடியாவினை ஒத்தது.மதுரையை சார்ந்த அனைவர் வீடுகளிலும்,மதுரைக்கு சுற்றுலாவருபவர்களிடமும், மதுரையை பற்றிய வரலாற்றினை ஆய்வு செய்பவர்களிடமும் கண்டிப்பாக இருக்கவேண்டிய நூலாகும் மதுரவரலாறு.



உரைவீச்சு


விருட்சத்திருவிழா சிறப்பிற்கு சிறப்பினை சேர்க்கும் விதமாக வந்திருந்த சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் பசுமைநடையின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகளையும் அறிவுரைகளும் வழங்கினர்.குறிப்பாக தொ.பரமசிவம் அய்யா அவர்களும்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களும்,போராசிரியர்கள் சாந்தலிங்கம்,சுந்தர்காளி மற்றும் முத்துகிருஷ்ணன், குட்டிரேவதி,கவின்மலர்,சுகிதா ஆகியோர் உரையானது குறிப்பிடத்தக்கது.கீழக்குயில் ஊராட்சி ஒன்றிய தலைவர் உரைநிகழ்த்துகையில் இங்குள்ள சிலை மகாவீரர் சிலை என்று பசுமைநடைகுழுவினர் வருகைக்கு பின்பே தனக்கும் ஊருக்கும் தெரியும் எனக்கூறியது பசுமைநடையின் அவசியத்தினை உணர்த்தியது.இந்த உரைவீச்சினை தொகுத்து வழங்கியும் மற்றும் சிறப்பாக உரையாற்றிய திருமங்கலம் ஜெ.ஷாஜஹான் அவர்களின் பணிமிகவும் பாராட்டத்தக்கது.இலக்கிய உலகம் நீண்ட நாளுக்கு பின்பு இவரது உரையினை கேட்டு மனமகிழ்ந்தது.தொடர்ந்து இவரை மேடையேற்ற வேண்டியது நமது பொறுப்பு இல்லையெனில் நமக்கு தான் இழப்பு.சிறப்பு பேச்சாளர்கள் அனைவரின் உரைவீச்சும் யூ டியூப்பில் விரைவில் வெளிவர இருக்கின்றது பார்த்து பயன் அடையவும்.

குழந்தைகள் குதுகுலம்

விருட்சத்திருவிழாவின் பங்கேற்பாளர்களில் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு பரிசுகள் வழங்கியதை பார்த்தபொழுது எப்பொழுதும் எண்ணும் எண்ணம்போல் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா என நினைக்க தோன்றியது.விருட்சத்திருவிழாவில் குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்வாக பல இயற்கையார்வள பாடல்களும்,கலர்காகிததாள் கொண்டு பலவடிவம் உருவாக்குவதும்,சிறப்பு உணவும்,களிமண் கொண்ட பலவண்ண வடிவமைப்புகளும் அமைக்கப்பட்டன.வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாரம்பரிய விளையாட்டு பொருட்களான கில்லிதாண்டு,பரம்மபதம்,பம்பரம்,ஆடுபுலி ஆட்ட அட்டை பரிசாக வழங்கப்பட்டது குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

சரித்திரம் படைத்தது
விருட்சத்திருவிழாவிற்கு வருகை தந்தவர்களில் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.அதுவும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம்பேர்வந்திருந்தது நமது இளைஞர்களை சினிமா நடிகர்கள்.சாதி,மத மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து ஒவ்வொரு மாவட்டம் தோறும் இதை போன்ற பசுமைநடைகுழுவினை ஏற்படுத்தினால் ஓரளவு மீட்கலாம் எனவும் நமது தமிழகத்தின் தொன்மைதனை உலகிற்கு தெரிவிக்கவும் உதவும் எனதெரிகிறது.இந்த விருட்சத்திருவிழாவினை முடித்து வீட்டிற்கு கிளம்ப மனமே இன்றியும் அடுத்து நடையில் சந்திப்போம் என நண்பர்களிடம் கூறி விடைபெற்ற பொழுது இந்த விருட்சத்திருவிழாவினை பலநடைகளுக்கு முன்பே மனக்கண்களில் கண்டு நடத்தியும் முடித்து அந்த மகிழ்வினை நமக்கு கடந்த ஞாயிறில் வழங்கிய முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும் என்னுடனான பசுமைநடைகுழுவினர் அனைவருக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் சரித்திரம் படைத்த விருட்சத்திருவிழாவின் சார்பாக நன்றியினை காணிக்கையாக்குகின்றேன்.

                                                                              
வஹாப் ஷாஜஹான்,திருமங்கலம்.

2 comments:

  1. விரிவான அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete