Wednesday 6 February 2013

குற்றப்பதிவு குதிரைகொம்பே


 

 

குற்றப்பதிவு குதிரைகொம்பே.


தமிழகத்தில் காவல்துறை அலுவலகம் என்பது அந்த அந்தப்பகுதியின் ஆளும்கட்சி அலுவலகமாகவே இந்த இரண்டுகட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது.எந்த சட்டமீறலுக்கும் வழக்குப்பதிவு என்பது அந்தப்பகுதி மாவட்டச்செயலாளரின் கையில் தான் உள்ளது.காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுப்பது பெரும்பாலும் தற்பொழுது தவிர்க்கப்பட்டு ஆளும்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து மூலமே தீர்க்கப்பட்டுவருகின்றது. காவல்துறைக்கு   புகார்கொடுக்கவருபவர்களை அந்தப்பகுதி அரசியல்வாதிகளிடம் கட்டப்பஞ்சாயத்திற்கு அனுப்பி பங்கு பணமும் பெற்றுவரும் காவல்துறையினர் ஏராளம். இதில் திருட்டு,வழிப்பறி போன்ற குற்றங்களில் புகாரை பதிவு செய்யக்கூறும்  அரசியல்வாதிகளிடம் தாங்கள் கட்டப்பஞ்சாயத்தில் தலையிடாமல் இருக்கின்ற காரணத்தை கூறி காவல்துறைஎப்படியும் வழக்குப்பதிவை தவிர்க்கின்றனர்.இதில் சென்ற ஆண்டை விட தற்பொழுது குற்றங்கள் குறைந்து இருப்பதாக வேறு செய்திவெளியிட்டு வருகின்றன.உண்மையில் தமிழகத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான குற்றங்களுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வெகுஜன மக்களை ஏமாற்றிவருகின்றனர்.கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து தான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் செல்பவர்களுக்கு மட்டுமே வழக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. திருட்டுவழக்குகளில் வழக்கினைபதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயப்படுத்தினால் கண்டுப்பிடிக்கமுடியவில்லை என வழக்கினை முடித்துவிடுவோம் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என கூறியே வழக்குப்பதிவினை காவல்துறையினர் தவிர்த்து வருகின்றனர்.


மத்திய உள்துறை செயலாளர் அறிக்கை தற்போதைய காவல்துறையின் செயல்பாட்டினை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது.


 

சஸ்பென்ட் செய்ய வேண்டும் : மத்திய உள்துறை செயலாளர்!

புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைப் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ஆர்.கே சிங் பேசுகையில், போலீசார் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாட்டில் புகார் கொடுப்பதற்கோ அல்லது ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி விசாரிப்பதற்கோ பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வரும்போது வேதனையையே அனுபவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

அதிலும் பெண்கள், மிகவும் நலிந்த பிரிவினர் ஆகியோர், உள்ளூர் எம் எல் ஏக்களுடன் காவல்துறையை நாடினால் மட்டுமே, சரியான பதில் பெற முடிகிறது. இல்லாவிட்டால் தாங்கள் கொடுத்த புகாரின் நிலை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இந்த நிலைமை மாறவேண்டும் புகாரைப் பதிவு செய்ய மறுப்பது என்பது சட்டத்தை மீறிய செயல். எனவே புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது. மேலும்,

பெண்கள், நலிந்த பிரிவினர் எந்த வித தயக்கமும் இன்றி உதவிக்கு காவல்துறையை நாடும் அளவிற்கு சூழலை உருவாக்க வேண்டும். மானபங்கம் போன்ற புகார்களை பெண்கள் கூறத் தயக்கப் படும் சூழல் இல்லாதவாறு, காவல் நிலையங்களில் பெண் போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

ஒரு வழக்கின் விசாரணையை முடிக்க கால நிர்ணயம் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மூன்று மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம். வழக்கு தாமதமானால் சாட்சிகள் சாட்சி அளிக்க முன்வரமாட்டார்கள். இதுபோன்ற சிக்கல் இருப்பதால் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆர்.கே சிங் கூறியுள்ளார்

 

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் எழுத்தளவிலும் பேச்சளவிலும் மட்டுமில்லாமல் சாமானியர்களிடம் காவலர்கள் உண்மையாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் குற்றங்கள் உண்மையில் குறைய வாய்ப்புள்ளது.

.ஷாஜஹான்.
99425 22470.

No comments:

Post a Comment