Tuesday 26 July 2016

சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி

கிட்டன்ஸ் காலி 3டி வள்ளி
சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி
கடன்பட்டார்  நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். கம்பன் கடன் எவ்வளவு கலக்கம் கொடுக்கும் என்பதை உணர்ந்து எழுதியுள்ளான். கலக்கம் கொடுப்பதால் தானோ என்னவோ கக்கா போற மேட்டருக்கும் காலைக் கடன்  என பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும் கிராமங்களில் அதிகாலையில் செம்புடன் வயங்காட்டை நோக்கி படையெடுக்கும் கூட்டம் எந்த கடனை அடைக்கா விட்டாலும் காலைக் கடன் அடைப்பை அகற்றி விட்டே வீடு திரும்பும்.  நடிகர் கவுண்டமணி சொல்வது போல் நிலத்திற்கு உரம் போடும் பணியில்  தான் தற்பொழுது பலருக்கும் பல பிரச்சனைகள். ஒருசிலருக்கு மலச்சிக்கல் என்றால் மற்றொரு சாராருக்கு வயிற்றுப் போக்கு என  போக்கு காட்டுகிறது கக்கா மேட்டரு.

சமீபத்தில் அமிதாப் நடித்த “பிக்கு” என்ற இந்தி திரைப்படம்   வயதானவர்களுக்கு வரும் மலச்சிக்கல் பிரச்சனை பற்றி அலசுகிறது.  இன்று இது எவ்வளவு முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.  பலருக்கும் வயிற்றுப் போக்கின் அடைப்பிற்கு லோப்பிரேட் என்ற ஆங்கில மருந்தே அருமருந்தாய் பயன்பட்டு வருகின்றது. இதுவே பழக்கமாக மாறி விட்டால் வயிற்றின் பாகங்கள் அனைத்தும் ஜாமாகி விரைவில் மக்கராக வாய்ப்புள்ளது. நம்மிடம் மலச்சிக்கலுக்கும் வயிற்றுப் போக்கிற்குமான ஒரே சிகிச்சை மருந்து இருந்தது. நாம் தான் நல்ல விசயங்களை மறந்துவிடுவோமே!  நமது முன்னோர்கள் வயக்காட்டு வழியில் ஏற்படும் பிரச்சனைகளை வீடு வந்து சேரும் முன் தீர்க்க இயற்கை முறைகளை கடைபிடித்தனர்.

சிறுபூனைக்காலி கொடியின் பழங்களே அது. நம்மில் பலருக்கும்  சிறு பூனைக்காலி முப்பரிசவள்ளி புதுவித பெயராக தெரியும். சிறு பூனைக்காலி வறண்ட மற்றும் நீர்நிலைப்பகுதி ஓரங்களில் தரைகளிலேயே படர்ந்து கொடியாக வளரக்கூடியது. பள்ளி படிப்பில் செம்பருத்தி படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கின்றீகளா? நான் எல்லாம் நண்பர்களையும், வீட்டு உறவுகளையே  பிராக்டிக்கல் நோட்டில் படம் வரைய வேண்டுவேன். உங்களுக்காக தற்பொழுது பூனைக்காலியை விளக்கி மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றேன். ஏனெனில் இன்று கிராமங்களில் கூட சுண்டைக்காய் என நாக வள்ளிக்காயை சாப்பிட்டு மேலோக டிக்கெட் வாங்குகின்றனர் மக்கள்.   சரி வாங்க நம்ம சிறு பூனைக்காலி பற்றி பார்ப்போம்.

இதன் இலைகள் சிறிய பூனையின் காலடி தடங்களை போன்ற அமைப்பில் இருப்பதால்  சிறு பூனைக்காலி என அழைப்பர்.  இக்கொடியானது அடர் பச்சைநிற இலைகளையும் மலர்களானது முதலில் அழகு ரோஸ் (பிங்க்) நிற மலர்கள் மலர்ந்து பின்பு அதில் சிறு சிறு வெள்ளை மற்றும் பச்சை வேர்கள் போன்ற அமைப்பு தோன்றி  மஞ்சள் நிற மகரந்தமும் பெற்று மலர்கள் அழகாக இருக்கும். இம்மலரை சிலர் “கொடி தோடை” என்பர். வயிற்றுப் பிரச்சனையின் நிவாரணியான காய்கள் முதலில் பச்சை நிறத்திலும் பின்பு அதன் மீது கூண்டு போல பாதுகாப்பு வலை தோன்றி கடைசியில் மஞ்சள் நிறந்தில் பழுத்திருக்கும். நமது வயிற்று மஞ்சப்போக்கினை நீக்க இந்த மஞ்சள் பழங்கள் ஏற்றது.


நாம் தான் அவைகளை கண்டு கொள்வதில்லை. பறவைகள் இப்பழங்களை உண்டு மகிழ்ந்து கழித்து பூனைக்காலியை பல இடங்களுக்கும் பரப்புகின்றன. சித்த மருத்துவர்கள் இப்பழங்களைத் தேடி கண்டுபிடித்து பாதுகாத்து வயிற்றுப் பிரச்சனைகளுக்கான மருந்தாக மாற்றிக் கொடுக்கின்றனர். நண்பர்களே நாம் என்ன தான் முற்போக்குவாதியாக இருந்தாலும் பிற்போக்கு சரியாக அமையவில்லை என்றால் ரொம்ப கஷ்டம். அப்பெரும் நோக்கதோடு தான் இக்கட்டுரை படைக்கின்றேன்.


அனைத்து வயதினருக்கும் காலை நடைபயணம் நல்லது என நாம் அறிவோம் அல்லவா? அப்படி செல்லும் பகுதிகள் சுகாதார கேடுகளாக உள்ள போக்குவரத்து நிறைந்த பகுதியில் செல்வதை தவிர்த்து இது போன்ற செடி கொடி மரங்கள் நிறைந்த பகுதியை தேர்ந்தெடுத்து பயணிப்பது நல்லது. அத்துடன் காலையில் நாம் பார்க்கும் இயற்கை செல்வங்கள் (மரம்,செடி,கொடி,மலர்கள்,பறவைகள்) பார்வையிடுவதுடன் அது குறித்த விளக்கங்களை தெரிந்து கொள்வதும் நமது அடுத்த வாரிசுகளுக்கு கொண்டு செல்வதும் அவசியம் தானே நண்பர்களே!

3 comments:

  1. இந்த பழத்தை என்னவென்றே தெரியாமல் சாப்பிட்டிருக்கிறோம்ங்க சிறு வயதில்... :D
    நன்றாக இருக்கும். இதன் விதைகளை கடிக்கையில் தனி ருசியாக இருக்கும். பெயர் தெரியாமல் இருந்தேன். கண்டுகொண்டேன். நன்றி :)

    ReplyDelete
  2. ஐயா என்ன வென்று தெரியாமல் இந்த செடியை பிடுங்கி விட்டேன்.

    ReplyDelete
  3. விஷச்செடி என்றல்லவா நினைத்திருந்தேன்

    ReplyDelete