Friday 13 November 2015

நேரு எட்வினா நேசம்

                       
திருமங்கலம் இலக்கியப்பேரவை சார்பாக “இலக்கியத்தில் நட்பு” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்தனர். அதில் என்னையும் சேர்த்து பலர் இதே தலைப்பில் பேச இருப்பதாக கூறினர். நட்பு என்ற தலைப்பில் பலருடன் ஒருவராக பேசுவது என்றவுடன் தயங்கினேன். பின்பு அனைவரும் பேசும் தலைப்புகளை பார்த்த பொழுது  ஆண் பெண் நட்பு குறித்த இலக்கிய உரை இல்லாதது கண்டேன். இன்று நாம் நவநாகரீக தேவைகள் அதிகம் உள்ள உலகத்தில் வாழ்கிறோம். இது குடும்பத்தில் ஆண் பெண் இருவரும் பணம் ஈட்ட வேண்டிய தருணம். இதில் பெண்கள் நாளும் பல குணாதிசிய ஆண்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுக்கிடையே  எப்படி நட்பு கொள்வது மற்றும் நட்பினை தொடர்வது என்று அவசியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு “நேருவின் நட்பு” என தலைப்பில் பேசுவதாக பெயர் கொடுத்து உரையாற்றினேன். அதன் தொகுப்பினை கட்டுரையாக நமது உழைப்பாளி தளத்தில் வெளியிடுகிறேன். படித்து கருத்துரையிடவும்.


நேருவின் நட்பு
              இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு. உலகம் இன்றும் இந்தியாவை நேருவின் பூமியாகவே பார்க்கின்றது. ஆம் சென்ற ஆட்சி வரை நேரு குடும்பத்தின் கைவிரல் அசைவிலேயே இந்தியா நடை போட்டது. காரணம் நேரு விதைத்த விதை. நேருவின் தன்னலமற்ற ஆட்சியும் அவர்  நேர்மையும் தான் இதற்கு காரணம். நேரு உலகிற்கே நட்பு குறித்து பாடம் நடத்தியுள்ளார். உலகமே ரஷ்யா, அமெரிக்கா என இரண்டாக பிரிந்து நின்றது. ஆனால் நேருவோ இருவருடனும் சேராமல் அணிசேரா நாடுகள் என நட்பிற்கு இலக்கணம் வகுத்தார்.

இலக்கிய உலகில் நேரு
              நேரு சிறையில் இருந்த வண்ணம் தனது மகள் இந்திராவுக்கு பல கடிதங்கள் வடித்தார். அந்த கடிதங்கள் புத்தகமாக்கப்பட்டுள்ளன. "உலக வரலாறு' (Glimpses of World History) .  இந்தநூல் உலக பிரசத்தி பெற்றது. நேரு எழுதிய நூல்கள் " தி டிஸ்கவரி ஆப் இந்தியா " , அவருடைய " சுயசரிதை " மற்றும் "டுவார்ட்ஸ் ப்ரீடம்" முக்கியமானவையாகும். தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் நேருவின் புத்தகத்தினை படித்தப்பின்பு தான் கம்யூனிசப்பாதைக்கு திரும்பியதாக கூறுகிறார்.

நேரு - எட்வினா நட்பு
  
           உலக இலக்கியத்தில் நட்பு குறித்து பார்க்கையில் சக பாலினத்தினருடன் கொண்ட நட்பே அதிகம் பேசப்பட்டுள்ளது.  அவ்வையாரைக்கூட ஆண் என்றும் பல அவ்வைகள் இருந்ததாக இலக்கியம் கூறுகிறது.  நேரு குஜராத்தினை சேர்ந்த இருவருடன் மிகுந்த நட்பு கொண்டார். அவர்கள் மகாத்மா மற்றும் பட்டேல். இவர்கள் நட்பு குறித்து பேசப்பட்டாலும் இவர்கள் நட்பு குறித்த இலக்கிய நூல்கள் அதிகம் இல்லை. அடுத்ததாக தனது குழந்தையான இந்திராவுடனும், சிறு குழந்தைகள் மீது மாறா பற்றுக்கொண்டிருந்தார் நேரு. இது குறித்த இலக்கிய நூல்கள் மிக குறைவே. ஆனால் நேரு மற்றும் மெளன்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்குமான நட்பு குறித்து மூன்று திரைப்படங்கள், உலகம் தொடங்கி நமது உள்ளூர் எழுத்தாளர்கள் வரை பல இலக்கிய வெளியீடுகளை அளித்துள்ளனர். அனைத்தும் அனுமானம் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். நல்லவேளை தற்பொழுது மகாபாரத கதை எழுதப்படவில்லை. துரியோதனன் ,கர்ணன் நட்பினை விட துரியோதனன் மனைவி கர்ணன் நட்பே அதிகம் பேசப்பட்டிருக்கும். டயானாவை துரத்தி துரத்தி கொன்றவர்கள் தானே இந்த ஊடகவியலாளர்கள். நேரு எட்வினாவின் நட்பின் பால் எழுப்பிய ஊகங்களும் வதந்திகளும் அதிகம்.

அவைகள் வருமாறு

               “இண்டியன் சம்மர்” அலெக்ஸ் வோன் டுன்செல்மான் எழுதிய ஒரு வரலாற்று புத்தகம். இந்த புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் முடிவு மற்றும் இறுதி நாட்கள் குறித்து எழுதப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இப்புத்தகம் நேரு எட்வினாவின் நெருக்கம் குறித்தே அதிகம் பேசியது. எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக நேரு எட்வினா நெருக்கம் காரணமாகவே மௌன்ட்பேட்டன்  இந்திய சுதந்திரத்தை விரைவாக பிரகடனப்படுத்துவதினை ஆதரித்தார் என்கின்றது. பின்பு இப்புத்தகம் “இண்டியன் சம்மர்” என்கின்ற பெயரிலேயே திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.


             சசிதரூர் எழுதிய The Great Indian Novel (தி கிரேட் இந்தியன் நாவல்)   இந்திய சுதந்திர போராட்டக்களத்தினை மகாபாரத கதையுடன் ஒப்பிடுகிறார். நேரு திருதிராஷ்டராகவும் மகள் இந்திராவை துரியோதனியாகவும் குறிப்பிடுகிறார். நேரு எட்வினாவிற்கும் பிறந்த குழந்தையே ஜனநாயக ஆட்சியான இந்தியா என்கிறார். இவ்வளவு பேசிய சசிதரூர் இன்றைய நிலை எவ்வளவு எள்ளி நகையாடப்படுகிறது. மற்றவர்களை பற்றி தெரிந்த விசயங்களை எல்லாம் பேசவும் எழுதவும் முன்னால் சசிதரூரை எண்ணினால் வார்த்தைகள் நமக்கு வராது. சசிதரூர் நமக்கு ஒரு பாடம் ஆவார்.

             1993-ல் காத்ரீன் கிளெமென்ட் என்ற பிரெஞ்சு நாட்டுப்பெண் எழுத்தாளர் 'எட்வினா - நேரு' என்ற புத்தகம் எழுதினார். அதில்  எட்வினா தனது கணவர்  மெளன்ட் பேட்டன்க்கு நேரு குறித்து கடிதம் எழுதியதாக கூறுகிறார். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு மானசீகக் காதல் தான் இருந்தது' அது இருவருக்குமான இலக்கிய நட்பு என்று கூறியிருந்தார். உடன் காத்ரீன் இருவருக்குமான உறவு   சிறிய அளவில் இருந்தது என்றால் அதில் 'நெருக்கமான உறவு' கலந்திருந்ததா?" என்ற கேள்வி தொக்கி நிற்பதாக சந்தேகம் எழுப்பி அதையே பின்பு உறுதியாக்கி விடுகிறார். வெறும் வாயிக்கு அவல் கிடைத்தால் போதாதா? நம் ஊடக மற்றும் விமர்சகர்களுக்கு. அதற்கு பின்பு வந்த அனைத்து இலக்கிய எழுத்துகளும் நேரு எட்வினா உறவினை கொச்சைப்படுத்தியே வந்தன.

               நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷேகல் இவ்வாறு கூறுகிறார் இருவருக்குமான உறவு காதலும் நட்பும் கலந்த, இரு மனங்கள் ஒன்று கலந்து உறவாடிய ஓர் அபூர்வக் காதல். அதில் பாலியல் இருந்ததாக யூகிக்க மட்டுமே முடியும்"  என்கிறார் ஷேகல். அடுத்தவர் கற்பு விசயத்தில் இவர்களின் ஊகங்களை விளையாட விடுவதில் என்ன நியாயம் உள்ளது.

  
         நேருவின் காரியதரிசியான மலையாளி எம்.ஒ. மத்தாய் நேருவுடன் இன்னும் பலபெண்களை இணைத்து தனது புத்தகத்தில் எழுதினார். எட்வினாவை பற்றி எழுதும் பொழுது கிழவியை போன்ற சுருக்கமான தோல்களை உடைய இந்த பெண்ணிடம் ஏன் நேரு இவ்வளவு நேரத்தினை களிக்கின்றார் என்கிறார்.

            The Last Viceroy of India  என்ற திரைப்படம் புதிய கோணத்தில் நேரு எட்வினா நட்பினை பற்றி கூறியது. நேரு எட்வினாவின் காதலை மெளன்ட் பேட்ன் அறிந்து இருந்ததாக கூறுகிறது. மேலும் சுதந்திரதிற்கு பிறகு இந்தியாவை விட்டு செல்ல மனம் இல்லாமல் எட்வினா தவித்ததாக காட்சிபடுத்தியது. மெளன்ட் பேட்ன் மிகவும் கெஞ்சி அழைத்து செல்வதாக படம் அமைத்து எரிகின்ற நெருப்பில் கொல்லியை வைத்தது.

உண்மை என்ன?
    
        நேரு லண்டனில் படிக்கும் பொழுதே  எட்வினாவுடன் நட்பில் இருந்துள்ளார். சுதந்திரத்திற்கு பின்பும் ஏர் இந்தியா விமானம் மூலம் நேருக்கும் எட்வினாவுக்குமான  நட்பு கடிதம் மூலம் தொடர்ந்தது. லண்டன் இந்திய தூதரகம் இருவரின் கடிதத்தினையும் பரிமாறிட செய்தது. ஒரு நாள் கடிதம் வராவிட்டாலும் நேரு பதட்டமடைவதுடன் தூதரக அதிகாரிகளை துளைத்து எடுத்துவிடுவாராம். மௌன்ட்பேட்டன்  மகள்  பமீலாமௌன்ட்பேட்டன்  நேருவுடனான எட்வினாவின் நட்பினை குறித்து மௌன்ட்பேட்டன் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தினை மேற்கோள் காட்டி இருவரும் இலக்கிய நட்பில் மிகுந்த சந்தோஷம் அடைந்து வருவதாக கூறியுள்ளார். இடதுசாரி எழுத்தாளரான குல்தீப் நய்யார் அவர்களின் “பியான்ட் தி லைன்ஸ்” என்ற சுயசரிதை நேரு எட்வினாவின் நட்பின் பல கேள்விகளின் முடிச்சுகளை அவிழ்க்கின்றது. குறிப்பாக  எட்வினாவின் பேரன் லார்ட் ராம்சே நேரு எட்வினா நட்பு பற்றி கூறியது அலாதியானது. இருவருக்கிடையே இருந்தது     இலக்கியம்
தொடர்பான அலவலாவல் . அவர்களுக்கிடையே இருந்தது ஆத்மார்த்தமான காதல். ஆன்மாவின் காதல் என்றார். தொடர்ந்து இப்போதெல்லாம் காதல் என்றால் செக்ஸ் குறித்து தான் முதலில் பேசுகிறார்கள். ஆனால் அன்று அப்படி இல்லை, நேரு, எட்வினாவுக்கு இடையேயும் அப்படி இல்லை. அது ஆத்மார்த்தமான காதல். ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல். நேரு ஒரு கெளரவமான மனிதர். அடுத்தவர் மனைவியை, குறிப்பாக நண்பரின் மனைவியை அவர் மயக்க நினைத்ததில்லை, அப்படிச் செய்யவும் இல்லை என்றார்.  அத்தோடு நேருவின் கொள்ளு பேரனான ராகுலுடன் இருவரின் கடிதங்களை நாங்கள் பரஸ்பரம் மாற்றி வாங்கி படித்துள்ளோம் எனவும் கூறுகிறார் லார்ட் ராம்சே. ஆம் சுதந்திரத்திற்கு பின்பு மௌன்ட்பேட்டன் லண்டனில் நேரு டிரஸ்ட் என்ற அமைப்பினை துவங்குகிறார். மனைவியை கவரும் எண்ணம் இருப்பவருடன் யாராவது தொடர்பில் இருப்பார்களா? இங்கே ட்ரஸ்ட் துவங்குகின்றார் என்றால் இருவருக்குமான உறவு இலக்கிய நட்பு தான் என்பது உறுதியாகின்றது.

அனுமான அசிங்கம்
           

  மேலும்  குல்தீப் நய்யார் இந்தியாவின் சிறந்த பிரதமர் நேரு என்றும் மோசமான பிரதமர் இந்திரா என்கிறார். ஆண் பெண் நட்புகள் அனைத்தும் காதலாகவே பார்க்கப்படுகின்றது. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.  இது முந்தைய தமிழர் கூற்று. இருவருக்குமான  நட்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது என்று நாம் நம்புவோமாக. அப்படியே இருவருக்குமிடையே தவறான நட்பு இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இலக்கியம் படைத்து பணம் சம்பாரிப்பது அதைவிட தவறானச் செயல். சரி நேரு எட்வினா நட்பு குறித்து கண்டோம். இதில் நமக்கான பாடம் என்னவெனில், ஆண் பெண் நட்பு என்பது வளர்ந்து வரும் நமது நாட்டில் இனி தவிர்க்க முடியாது. சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குடும்பநல நீதிமன்றங்களில்  தம்பதிகள் விவகாரத்திற்கு 70 சதவீதமான காரணம். மனைவி ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசுகிறாள் கணவன் பெண் நண்பர்களுடன் செல்போனில் பேசுகிறான் என்பதே. இன்று கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இல்லை. தம்பதியர் நன்றாக வாழவேண்டிய காலங்களான இளம் வயதில் பிரிந்து இருந்து விட்டு முதுமையில் இணைவது இனிக்காது. அடிப்படை ஒழுக்கமும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் எண்ணமும் இன்றி வாழ்தல் நலம். நேருவின் மனைவி கமலாவிற்கு பிடித்த சிவப்பு ரோஜாவை தனது வாழ்க்கை முழுவதும் ஆடையில் அணிந்த நேருவை அனுமானங்களால் அசிங்கம் செய்யாமல் இருப்போம்.
.
                                           வஹாப் ஷாஜஹான்,

                                                                                                                                  திருமங்கலம். 

No comments:

Post a Comment