Wednesday 29 October 2014

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில்1.


மதுரை சூழலியல் சந்திப்பு காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறுகின்றது என கேள்விபட்ட நேரத்தில் என்ன நிகழ்வு இது கலந்துதான் பார்போமே என கிளம்பினேன். புலவர் பிசிராந்தையார் தாம் பாடும் பாடலில் “கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை” என்கிறார். அதாவது மாலையில் பறவைகள் தங்கள் கூடுகளை அடையும் இயல்பினைக் சங்ககாலத்தில் அழகாக விவரிக்கின்றார். அதே நேரத்தில் காந்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த நான் போட்டி தேர்வாளர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இருந்து அவர்களும் பறவைகளை போல் தங்களது இல்லங்களுக்கு கிளம்பி கொண்டு இருந்தமையையும் காந்திபிரானையும் பார்த்தவண்ணம்  நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தேன்.

அங்கு நான் கண்ட அரங்க காட்சியானது பறவைகளின் கூட்டினை ஒத்ததாக அமைந்திருந்தது. மின்தடையின் காரணத்தினால் இருட்டாகவும் ஆர்வத்துடன் வந்திருந்த சிறுவர்களும் பங்கேற்பாளர்களும் தங்களுக்குள் மென்மையான குரலில் பேசிக்கொண்டிருந்தது பறவைகளின் கீச்சிடும் குரலுக்கு ஒப்பாக அமைந்தது. நிகழ்ச்சியினை ஆரம்பிக்க மின்சார எதிர்பார்ப்பில் காத்திருந்து பின்பு மின்தடையிலும் 5.30 மணியளவில் தங்களை காக்க வைத்தமைக்கு மன்னிக்கக்கூறி  நிகழ்வினை துவங்கினர். முதல்நிகழ்வாக நாணல் நண்பர்கள் திரு.தமிழ்தாசன் நிகழ்ச்சியின் நோக்கத்தினையும் அவசியத்தினையும் விளக்கினார்.



தமிழ்தாசனின் உரையில் இயற்கை சூழலியலை காப்பதில் நமது பகுதி உயிரினகாப்பின் அவசியத்தினை விளக்கினார். மதுரையில் பிணம்திண்ணி கழுகுகள் இருந்து தற்பொழுது காணகிடைக்காததினையும் புலிகளும் மதுரையில் இருந்ததற்கான தகவல்களையும் தெரிவித்தார். அத்துடனையே மதுரை உயிரிணங்கள் வாழத்தகுதியற்ற நிலைகளுக்கு சென்று வருவதினையும் இந்நிலைதனை மாற்ற உயிரிணங்கள் மற்றும் பசுமைபரப்புகளை அதிகப்படுத்துவதன் அவசியத்திற்கே இச்சந்திப்பு என கூறினார். தேசியவனக்கொள்கையின் படி மொத்தநிலப்பரப்பில் 33% காடுகள் அமையபெற்றிருக்கவேண்டும். ஆனால் தற்பொழுது இந்தியாவில் 20% பகுதியே காடுகள் அமையப்பட்டுள்ளதினையும் அதிலும் தமிழகத்தில் 15% பகுதியே காடுகள் அமையப்பட்டுள்ளதினையும் இன்னும் மதுரையில் 11% பகுதியே காடுகள் அமைந்துள்ள சோகமான உண்மைசெய்தியினை தெரிவித்தார். காடு அழிப்பினில் மனிதனின் பங்கே அதிகம் நாம் பருகும் தேநீரானது காடுகளை அழித்து உருவான தேயிலை தோட்டங்களில் உருவானது. இருட்டில் உட்கார்ந்து நாம் பேசுவது நமது மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இங்கு வந்து இருப்பவர்கள் சிறியகூட்டமாக இருப்பினும் இவர்கள் நமது நாடு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் பொழுது கொடியினை ஏந்திச்செல்லும் வீரர்களுக்கு ஒப்பாவர் என்றார். அடுத்ததாக நாணல் நண்பர்களை சேர்ந்த திரு.சாதிக் சிறு உரையாற்றினார்.

சாதிக் கூறுகையில் பறவைகாணும் நிகழ்விற்காக நாம் செல்லும் கண்மாய்களிலும் அதை சார்ந்த கிராமங்களிலும் உள்ள மக்கள் தங்கள் பகுதி நீர்நிலங்கள், பறவைகளின் மதிப்பினை உணர்ந்து கொள்வர். சிட்டுக்குருவி அழிவினில் நம்முடைய தேவைக்கு அதிகமான ஆடம்பர தொழில்நுட்பவளர்ச்சி முன் நிற்கின்றது. சென்ற தலைமுறையினர் பார்த்த பலபறவைகளை நாம் பார்க்கமுடியவில்லை. அடுத்த தலைமுறையினருக்கு நாம் பார்க்கும் பறவைகளை பார்க்கச்செய்வதே இந்த சூழலியல்கூட்டத்தின் முன் முயற்சியாகும். தனது வீட்டின் மாடியில் ரெட் வென்டட் புல்புல் பறவை கூடுகட்டியமையையும்,அதை பற்றி பறவையாளர்களிடம் விசாரித்த பொழுது அவர்கள் கூறியப்படியே 3குஞ்சுகள் பொரித்து அதில் 2மட்டும் பிழைத்து பறந்து சென்றமையை மகிழ்வுடன் விளக்கினார்.மனிதர்கள் இல்லை என்றால் எல்லா உயிரினங்களும் வாழ்ந்துவிடும் ஆனால் மற்ற உயிரிணங்கள் அழிந்தால் நமது வாழ்வின் பொருள் அழிந்துவிடும் என்றார். காக்கையானது எல்லாவகையிலும் நமது சுற்றுப்புற பாதுகாப்பிற்கு உதவுகின்றது. பணம் பணம் என்று பணத்தினை நோக்கி ஓடும் மனிதர்கள் பல்லுயிர் காத்தலிலும் கவனம்செலுத்தவேண்டும். சிங்கங்களால் மான்கள் அழிக்கப்படுவதில்லை.மாறாக மனிதர்களால் தான் காடுவளம் அழிக்கப்படுகின்றது. மனிதனின் காலடித்தடங்களால் தான் புல்வளர்ச்சியும் கெடுக்கப்படுகின்றது. திருவண்ணாமலை பகுதியினை ஜிண்டால் நிறுவனம் அழித்துவிட்டால் அந்தப்பகுதியில் மக்கள் வாழமுடியாது.அதே போன்று அரிட்டாபட்டி மலையினை அழித்து விட்டு அந்தப்பகுதி மக்கள் வாழ்வினை நினைத்துப் பார்க்க முடியாது. இயற்கையும் மனிதர்களும் இணைந்து வாழச் செய்யும் முயற்சியே இந்த சூழலியல் சந்திப்பு என முடித்தார்.

அடுத்ததாக தமிழகத்தில் பறவைகளின் பாதுகாப்புக்கருதி பட்டாசுகள் வெடிக்காமல் பசுமை தீபாவளி கொண்டாடிய பலகிராமங்களின்  மக்களை பாராட்டி தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் மதுரைமாவட்ட வனத்துறை அலுவலர் நிகர்ரஞ்சன் அவர்களுடன் இணைந்து  சாமநத்தம் கண்மாய் பகுதியினை பறவைகள் சரணாலயமாக மாற்றும் முயற்சியும் சிவரக்கோட்டை பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் மான்களைப் பற்றியும் வனப்பகுதியினை அதிகரிக்க எடுத்த, எடுக்க இருக்கும் முயற்சிகளை நாணல் நண்பர்கள் அறிவித்தது. விவேகானந்தர் கூறிய அந்த மாற்றங்களுக்கான இளைஞர்களை கண்ட மகிழ்வு ஏற்பட்டது.
இன்னும் சுவாரசியமாக பறவைகள் ஆய்வாளர்கள் படங்களுடன் எவ்விதம் பறவைகளை பார்வையிடுவது  மற்றும் கணக்கெடுப்பு நடத்துவது என்பது விளக்கிய அறிய தகவல்கள் அடுத்தபதிவினில்…… படித்துபகிரவும்.
                                      உங்கள் வஹாப்ஷாஜஹான்.                                                      திருமங்கலம்.             

விரைவில்

        இறகுகள் முளைத்திட்ட பொழுதினில்2 

No comments:

Post a Comment