Sunday 21 August 2016

தே மதுர தேவன் குறிச்சி



மலையும் மலை சார்ந்த பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.   6000ம்  ஆண்டுகால தள வரலாறும் , ஆறு விதக்  கடவுள் வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே இணைந்த  அதிசய மலை  தேவன்குறிச்சி .   மேற்கு தொடர்ச்சி மலைகளின்  அழகில் இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது.  இம்மலை  மதுரையிலிருந்து  சுமார் 40கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது.  மதுரை , திருமங்கலம், தே.கல்லுப்பட்டி வழியாக  பேரையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  தே.கல்லுப்பட்டி  என்னும்  ஊரின் பெயரில் தே என்பது  தேவன்குறிச்சி யையே  குறிக்கும். சூழல் உலாவின்  சமீபத்திய பயணமான  தேவன் குறிச்சி (குறிஞ்சி) யின் மறக்கவியலா பயணக்குறிப்புகள் தங்களின் இனிய பார்வைக்கு…

ஆறு கடவுள் வழிபாடு.

ஸ்ரீ அக்னீஸ்வரர்  கோமதி அம்மன் கோயில்”  என்ற வரவேற்பு நுழைவாயில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும் நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில்  ஒன்றும் உள்ளது.


 மலை ஏற்றத்தின் துவக்கத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.  சிவன் கோவில் மேற்கு நோக்கி அமைந்திருப்பதிலேயே இக்கோவில் காலத்தால் மிகவும் பழமையானது என்று புலனாகிறது. மலை ஏற்றத்தில் இடதுபுறம் சமண தலமும், வடப்புற மலை மீது அனுமன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. 
அனுமன் கோவில் செல்லும் பாதையெல்லாம் அனுமன்கள் (குரங்கு) சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகவே  உள்ளது. ஆஞ்சிநேயர் கோவில் சுற்றுச்சுவர் இல்லாமல் பெயரளவிற்கு தகர மேற்கூரையுடன் காட்சியளிக்கின்றது. 
அனுமன் சிலைக்கு அருகில் சிறிய பாறை நட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டு சந்தனம் குங்குமம் இடப்பட்டிருந்தது. இன்னும் மலைக்கு மேலே ஏற சிறிய வகையிலான படிக்கட்டுகள் சரிவர வெட்டப்படாமல் இருந்தது. 
மலை ஏற்றத்தில் பல இடங்களில் வழுக்குப்பாறைகளுடன் எனக்கு  சிறந்த உடற்பயிற்சி களமாக அமைந்தது. உச்சி மலையில் பெருமாள் கோவில் இருந்தது. சில நேரங்களில் மட்டும் பெருமாள் கோவில் திறந்து வைத்திருப்பதால் கீழே விசாரித்து செல்வது நலம்.
 நானே கஷ்டப்பட்டு மலை ஏறிவிட்டதால் ஓரளவு ஆரோக்கியம் உள்ளவர்களே முயன்றால் ஏறிவிடலாம். மலையின் மேலிருந்து பார்க்கையில் சுற்றுப்புற நகர்கள், விவசாய நிலங்கள் , மேற்குத் தொடர்ச்சி மலைகள் என அனைத்து இயற்கை காட்சிகளை  விமானப்பார்வையில் அழகுற  பார்த்து மகிழலாம். இத்தலத்திற்கு நீண்ட கால திருமண, மற்றும் சுபகாரீயங்கள் தடைபெற்றவர்கள் வந்து நீராடி செல்வதன் மூலம் நிவாரணம் பெறலாம் என கோவிலை தரிசிக்க வந்த ஆன்மீக நண்பர் கூறினார்.

பறவைகள்

தேவன்குறிச்சி மலையின்  இயற்கை எழில்மிகுந்த காட்சி பறவைகளை காந்தம் போல் கவர்ந்து இழுத்து அழைத்து வருகின்றது. இப்பயணத்தில் அடர் வனம், கடும் பாறை மலைகளில் மட்டும் காணப்படக்கூடிய கொம்பன் ஆந்தை (INDIAN EAGLE OWL) பார்த்து புகைப்படம் எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
அடுத்ததாக வண்ணங்களால்  அதிகம் ஈர்க்கப்படுவதும் அதன் கொண்டையால் பெயர் பெற்ற கொண்டலாத்தி பறவை (HOOPOE)  காண கிடைத்தது.







 மேலும் நத்தை கொத்தி நாரை, மயில், புல்புல், கதிர்குருவி, மைனா, வால்காக்கை, கீச்சான் மற்றும் பருந்துகள் பார்வையிடப்பட்டது. வண்ணத்துப்பூச்சிகளும் தங்கள் பங்கு வந்து பேஷன் ஷோ வாக பூனை நடை போட்டு எங்களையே சுற்றி சுற்றி வளைய வளைய வந்தன.

கல்வெட்டுகள்

இன்று கோயில்களில் ஒளிரும் டியூப்லைட்களில் உபயம் என பலரின் பெயர்களை பதித்து விளக்கின் வெளிச்சத்தையே குறைத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இது நமது முன்னோர்கள் நமக்கு காட்டிய வழிமுறை தான் என தேவன்குறிச்சி கல்வெட்டுகள் கூறுகின்றன. 



ஆம் கோவிலுக்கு மன்னனால் வழங்கப்பட்ட மானியத்தின் விபரம், கோவில் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட  நிலங்கள், விளக்கு ஏற்றி பயன்பாட்டில் வைக்க வழங்கப்பட்ட நிலங்கள் அதன் எல்லைகள், படிக்கட்டுகள் கட்டி கொடுத்த தனவந்தர்  என எட்டு கல்வெட்டுகள் உள்ளன. இக் கல்வெட்டுகள்  முறையே சிவன் கோவில் பகுதியின் சுவர், மலை ஏறும் இடம், குளம், கிணறு என பரவலாக உள்ளது. இக்கல்வெட்டுகள் மாறவர்ம சுந்தரபாண்டிய காலத்திய கல்வெட்டுகள் என தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் இங்கு 1976 ல் அகழ்வாராய்ச்சி நடந்து சங்கு, மணிகள்சிவப்பு கற்கள், பழங் கற்கருவிகள், கல் ஆயுதங்கள் என பழங்காலத்திய  பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் பூட்டிற்கு பெருமிதம் கொண்டது என்பதால் திண்டுக்கல் செல்லுபவர்கள் யாரும் வாய்ப்பூட்டு போடுவதில்லை. நன்றாக திண்டுக்கல் பிரியாணியை ஒரு பிடி பிடித்தே திரும்புவர். ஆம்பூர் சென்றால் அன்லிமிட்டா (unlimit) பிரியாணி சாப்பிடுவது போன்று நம்ம கல்லுப்பட்டி பயணம் எவ்வகை உணவிற்கு சிறப்பு பெற்றது என்பது குறித்தும், கல்லுப்பட்டியின் சிறப்பு ஜே.சி குமரப்பா குறித்தும் மலையில் உள்ள சமண சின்னங்கள், நடுகல், கற்திட்டை குறித்தும் பகுதி மக்களின் கோரிக்கைகள் அடுத்த தே மதுர தேவன் குறிச்சி 2 பாகத்தில் தொடரலாம்.
           வ.ஷாஜஹான், திருமங்கலம்.
                  99425 22470


விரைவில்:  தே மதுர  தேவன் குறிச்சி 2.

2 comments:

  1. தங்கள் படைப்புகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

    ReplyDelete
    Replies
    1. நன்றி அடுத்த பதிவுகளை பதிவு செய்கின்றேன்.

      Delete